உரிய அனுமதியின்றி சிறுத்தை தோல்வைத்திருந்ததாக, ஜீனா மெடம் என்றழைக்கப்படும் ரோஸ்மேரி பெரேராவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்திற்கு வருமாறு தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று அழைப்பாணை விடுத்தார்.கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் விபசார விடுதி நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட ரோஸ்மேரி பெலிஸியா பெரேராவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சிறுத்தை தோல் ஒன்றை கைப்பற்றியதாக புலன்விசாரணை அதிகாரி நீதிமன்றில் கூறினார்.
செப்டெம்பர் 23 2009 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட சிறுத்தைத் தோல் குறித்து, அறிக்கை பெறுவதற்காக தேசிய விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பியதாக உதவி இன்ஸ்பெக்டர் ஜனக் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்தார்.
நீதிமன்றின் அனுமதியின்றி மேற்படி சிறுத்தை தோலை தேசிய விலங்கியல் பூங்காவுக்கு புலனாய்வு அதிகாரி அனுப்பியதாக எதிர்த்தரப்பு வாதிட்டது. அதைத்தொடர்ந்து, தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்ததுடன் வழக்கை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
.gif)
