தங்களை தடுத்துவைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 10 இலங்கை அகதிகள் 11 நாளாகவும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். கடத்தல் சம்பவங்கள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளையும் உள்ளடக்கிய சிறிய குழுவினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 8 இலங்கைத் தமிழர்கள் சில நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசாங்க வைத்தியசாலையில் பொலிஸாரினால் அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் மேற்கொள்ளும் இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம் இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறான போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை சென்று இவர்களை பார்வையிட்ட இந்திய கம்யூனிசக் கட்சியின் மாநில செயலாளர் த.பாண்டியன் தெரிவிக்கையில், 'அவர்களின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்' என்றார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 29 இலங்கைத் தமிழர்கள், 2 நைஜீரியப் பிரஜைகள், ஒருதென்னாபிரிக்கப் பிரஜை, ஒரு நோர்வே பிரஜை தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'இந்த முகாமில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 3 பேர் உள்ளனர். இலங்கையில் ஏனைய ஆயுதக் குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் அண்மையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் காரணமாகவே இவர்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்' என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிலர் மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், இன்னும் சிலர் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள கைதிகளின் நடத்தைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. 'வரித்துறை, பொலிஸ் திணைக்களங்கள் மற்றும் சட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
ஆனால் பொலிஸாரினால் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், கைதிகள் நடைமுறையில் காலதாமதம் காரணமாகவும் தொடர்ந்து தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிறப்பு முகாமில் சுமார் 6 வருடங்களாக சில இலங்கைத் தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சிலர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டபோதிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிசக் கட்சியின் மாநிலச் செயலாளர் த.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைதிகளின் விடுதலையை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக திரைப்பட தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜா குற்றஞ்சாட்டினார். இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு கோரி முதலமைச்சருக்கு 500 தந்திகளை அனுப்பிவைப்பதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
.gif)
