ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 24 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கின்றமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது. வி.ஐ.பி.களின் விசேட பயணங்களே இந்த நஷ்டத்திற்கு பிரதான காரணம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.2010 நடுப்பகுதியிலிருந்து அரசாங்க உயர் மட்டத்தினர் இருபதுக்கும் அதிகமான நாடுகளுக்கு செல்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பயன்படுத்தியுள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலானவை விசேட விமானப்பயணங்கள் எனவும் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கடந்த சில மாதங்களில் 15 நாடுகளுக்கு விஜயம் செய்ததாகவும் இவ்விஜயங்களால் நாட்டிற்கு சாதகமான பலன்கள் கிடைக்காத நிலையில், இவ்விஜயங்களுக்காக செலவிடப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா நிதி வீண் விரயமாகி விட்டது எனவும் அவர் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவு தேடி பல நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்த போதிலும் அப்பிரேரனையை தோற்கடிக்க அவர் தவறிவிட்டார் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கும் பல ஜந்துகளில் ஒன்றாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளங்குகிறது என அவர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், போக்குவரத்துச் சபை ஆகியனவும் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் அரச நிறுவனங்கள் என அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தை எதிர்கொள்வதால் மக்களுக்கு சலுகை வழங்க முடியவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
.gif)
