(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் மதுரங்குளிக்கும், முந்தல் நகருக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் நடமாடும் நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
புத்தளம் நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் மக்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்களை குறைக்கும் நேக்கிலேயே குறித்த நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வியாழக்கிழமை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து மதுரங்குளி, முந்தல் ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள பிரதேசத்தில் குறித்த நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய போது அதனை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
புத்தளம், கற்பிட்டி, ஆனமடுவ, ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச சபைகளும், மதுரங்குளி, முந்தல், உடப்பு, பள்ளம ஆகிய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் குறித்த நடமாடும் நீதிமன்றம் நிருமாணிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் மக்கள் பயன் பெறுவுள்ளர்.
இதேவேளை கற்பிட்டி நகரிலுள்ள நடமாடும் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் ஒன்றும் நிருமாணிக்கப்படவுள்ளது. இதற்காக நீதி அமைச்சு 2 கோடியே 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
தற்போது புத்தளம் நகரில் நிருமாணிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான காதி நீதிமன்றத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா தினத்தன்று கற்பிட்டி நீதிமன்றத்திற்கான அடிக்கல்லை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டி வைப்பார் என்றும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் மேலும் தெரிவித்தார்.
.gif)
