.jpg)
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
கிழக்கு மகாண சபை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று புதன்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அதன் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வேட்புமனுப் பத்திரத்தை கையளித்தனர்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் நாளை வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சிகளின் தலைமை வேட்பாளர்கள்
தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையிலும் ஐக்கிய
தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அரியரட்னம் சசிதரன் தலைமையிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதேவேளை, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சி இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
அக்கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் இராஜநாதன் பிரபாகரன் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பி.எஸ்.எம்.சார்ள்சிடம் வேட்புமனு பத்திரத்தை கையளித்தார்.
ஈரோஸ் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் போட்டியடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
.jpg)
.gif)
