
ஈரானிய யுத்தக்க கப்பல்கள் நேற்று சனிக்கிழமை சுயஸ் கால்வாய்க்கு ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார்.
பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979 ஆம் ஆண்டின் ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அந்நாட்டுக் கப்பல்கள் சுயஸ் கால்வாயை கடந்தமை இது இரண்டாவது தடவை எனவும் அவர் தெரிவித்தார்.
எத்தனை கப்பல்கள் இப்பயணத்தை மேற்கொண்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்தில் அவை முன்னர் தரித்துநின்றதாகவும் அவர் கூறினார்.
பெப்ரவரி 4 ஆம் திகதி ஈரானிய நாசகாரி கப்பலான சஹிட் காண்டி மற்றும் விநியோக கப்பலான கார்க் ஆகியன செங்கடலில் தரித்துநின்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அமெரிக்க யுத்தப் கப்பல்கள் பாரசீக வளைகுடாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹேர்முஸ் நீரிணைக்கு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் ஈரானிய யுத்தக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
RSS feed for comments to this post