கஞ்சனூர் சுக்கிரன் கோயிலுக்குச் சென்ற சுவாமி நித்தியானந்தா மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட செருப்பு, நித்தியானந்தாவின் காரின் மீது பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்துக்கு எதிராக அவ்விடத்தில் குரல் எழுப்பிய நித்தியானந்தாவின் சீடர்கள் இருவர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோவில் எனப்படும் சுக்கிரன் கோவில் மதுரை ஆதீன மடத்திற்குட்பட்டது. இங்கு வந்து கணக்கு கேட்ட நித்தியானந்தாவின் இரு சீடர்கள் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் வந்துள்ளனர். நலம் விசாரித்த பின்னர் நேற்று இரவு சுமார் 200 பேர் சகிதம் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை கோவிலை அமைதியான முறையில் சுற்றி வரத் தீர்மானித்த இவர்களை, நிலைமை சரியில்லை என்பதால், ஆரம்பத்தில் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் பொலிஸ் வாகனங்கள் புடைசூழ இருவரும் கோவிலைச் சுற்றி வர அனுமதிக்கப்பட்ட பின்னர் மதுரை நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்களது கார் கோவில் வாசல் வழியாக வந்தபோது அங்கு திரண்டிருந்த கஞ்சனூர் கோவில் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நித்தியானந்தாவை எதிர்த்துக் கோஷமிட்டுள்ளனர். பின்னர் ஒருவர் செருப்பை எடுத்து கார் மீது வீசி எறிந்துள்ளார்.
இதைப் பார்த்து கோபமடைந்ம நித்தியானந்தாவின் சீடர்கள் இருவர் ஆவேசத்துடன் குரல் எழுப்பியுள்ளனர். இதைப் பார்த்த மீட்புக் குழுவினரும் பொதுமக்களும் இணைந்து இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. (தற்ஸ்தமிழ்)
.gif)
Comments
RSS feed for comments to this post